நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , » இயேசு முழு உலகத்தாருக்கும் அனுப்ப பட்டவரா?

இயேசு முழு உலகத்தாருக்கும் அனுப்ப பட்டவரா?



இஸ்லாமிய நண்பரொருவரின் கேள்விக்கான பதில்...
இங்கே அவருடைய கேள்வி நீல நிறத்திலும், என்னுடைய பதில் சிவப்பு நிறத்திலும் எழுதப்பட்டுள்ளது.



இஸ்லாம் நண்பர் -
இயேசு முழு உலகத்தாருக்கும் அனுப்ப பட்டவரா..???

என்னுடைய பதில் - 
ஆம் நண்பா அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதற்கான ஆதாரங்களை நீங்கள் இந்த பதில் கட்டுரையில் கண்டு கொள்வீர்கள்.

இஸ்லாம் நண்பர்-
மாற்கு-16 அதிகாரம்-15… உண்மையிலே முழு உலகத்தையுமா சுட்டிக்காட்டுகின்றது..??
!!...இதோ அந்த வசனமும் அதற்கான பதிலும்...!!!!
மாற்கு-16 அதிகாரம்-15. பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
இந்த வசனத்தை ஒரு கிறிஸ்தவ மத போதகர் வாசிக்கும் போது ஒரு சாதாரண கிறிஸ்தவர் இது உண்மை தான் என்று நம்பி விடுவார் உண்மைதான் அனால் எம்மை கிறிஸ்தவ தலைவர்களால் ஏமாற்ற முடியுமா..?? இதோ அழகாக உங்களுக்கு தருகின்றோம் இது உண்மை என்பதை உணர்தால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்...!!!

என்னுடைய பதில் - 
முதலில் -“மாற்கு-16 அதிகாரம்-15” என்று எழுதுவது தவறு என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதை இப்படி எழுத வேண்டும். “மாற்கு-அதிகாரம்-16 வசனம்-15” இப்படி எழுதுவதே சரி. அதை விட“மாற்கு-16:15” என்று எழுதுவதே வேதாகம வசன முகவரியிடல் முறையாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சரி அதை நாங்கள் ஒருபுறம் வைத்து விடுவோம்.

நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள தவறி விட்டீர்கள். கிறிஸ்தவ போதகர்கள் சொல்லும் எல்லாவற்றையுமே அப்படியே ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு இன்றைய கிறிஸ்தவ உலகம் இல்லை. ஏனெனில் எல்லாரிடமும் பைபிள் அவரவர் மொழிகளில் இருக்கிறது. எல்லாரும் பைபிளை படிக்கிறார்கள். போதகர்கள் தவறான உபதேசங்களை கொடுக்கும் போது உடனே அது தவறு என்று கூறும் கிறிஸ்தவர்கள் எல்லா சபையிலுமே காணப்படுகின்றனர். அப்படி ஒருவேளை ஒரு சபையில் அப்படிப்பட்டவர்கள் இல்லாவிட்டாலும் வேறு சபைகளில் இருப்பவர்கள் அந்த தவறான உபதேசங்களை கேள்விப்பட்டவுடன் முகநூலிலும் வேறு தளங்களிலும், வாராந்த மாதாந்த கிறிஸ்தவ பத்திரிகைகளிலும் அதை விமர்சித்து கொள்கிறார்கள். இந்த முக்கியமான வசனம் தவறாக உபதேசிக்கப்பட்டால் சும்மா இருந்து விடுவார்களா?


இஸ்லாம் நண்பர்-
நிறுவல் :-
மார்க் - சொல்வதை போன்று இயேசு முழு உலகிற்கும் தான் அனுப்ப பட்டர் என்று ஒருவர் ஏற்றுக்கொண்டால் அவர் மதேவ்- சொல்வதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் என்ன சொல்கின்றார்...???

மத்தேயு- 4 அதிகாரம்-8. மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:

இந்த வசனம் சொல்கின்றது பிசாசு இயேசுவுக்கு ஒரு மலை உச்சியில் இருந்து முழு உலகையும் காட்டியதாக...!! இந்த வசனத்தின் படி பூமி தட்டையாக இருந்தால் மட்டுமே மலை உச்சியில் இருந்து அப்படி உலகை பார்க்கலாம் ஆனால் பூமி உருண்டை என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும் எனவே இந்த இடத்தில் சொல்வது பிசாசு மலை உச்சியில் இருந்து இஸ்ரவேலர்களின் 12 கூட்டத்தாரையும் தான் காட்டினான் என்று....!!!

எனவே இந்த வசனத்தில் சொவது முழு உலகம் என்று இஸ்ரவேலர்களின் 12 கூட்டத்தாரை மட்டும் தான் அப்படியானால் மார்க்கு சொல்லும் முழு உலகமும் என்று இந்த 12 கூட்டத்தாரை மட்டும் தான் என்பது தெளிவாகின்றது எனவே ஒரு கிருஸ்தவர் இதில் ஒன்றை புறக்கணித்தாலும் பைபிள் நவீன விஞ்ஞானத்துடன் முரண்படும்..!!!!!

என்னுடைய பதில் - 
இந்த நிறுவல் தவறானது என்பதற்கு இரண்டு காரணங்கள் தருகிறேன்.

முதலாவது - 
“முழு உலகம்” என்னும் சொற் பிரயோகத்தை மத்தேயு 12 கோத்திரத்தையும் குறிக்க பயன்படுத்தினார் என்பதற்காக, மாற்குவும் “முழு உலகம்” என்னும் சொற்பிரயோகத்தை 12 கோத்திரங்களை குறிப்பதற்கே பயன்படுத்த வேண்டும் என்று கருதுவது தவறான கருத்து.... 

ஏனெனில் வேதாகமத்தை எழுத ஆவியானவர் பயன்படுத்திய எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் ஒரே சொற்பிரயோகங்களை வெவ்வேறு கருத்துகளில் பயன்படுத்தியுள்ளனர். அது வேதத்தை  வாசிக்ககும் போது விளங்கும்.

உதாரணமாக தண்ணீரையும்,அக்கினியையும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதாரிசிகள் சிலர் பாடுகளுக்கும், பிரச்சனைகளுக்கும் ஒப்பிட்டு எழுதியுள்ளனர். ஆனால் இயேசு தண்ணீரையும் அக்கினியையும் பரிசுத்தாவியானவருக்கு ஒப்பிட்டு பேசினார். மேலும் தண்ணீர்கள் என்று பல இடங்களில் ஜனத்திரளையும் குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. இவற்றை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு பேசுவது அறிவீனம் அல்லவா?

இரண்டாவது - 
இஸ்ரவேலரின் பன்னிரண்டு கோத்திரத்தாரையும் மட்டும் “உலகத்தின் சகல ராஜ்யம்” என்று கூறுவது அர்த்தமற்றது. ஏனெனில்இஸ்ரவேலர்களிடம் அக்காலத்தில் ராஜ்யம் இருக்கவில்லை. அவர்கள் ரோம ராஜ்யத்தின் ஆழுகையின் கீழ் இருந்தனர். அதனால்தான் இயேசு உயிர்த்த பின் இயேசுவிடம் இக்காலத்திலா ராஜ்யத்தை திரும்ப தருவீ்ர் என்று சீஷர்கள் கேட்டனர்.

மேலும் பிசாசுஇயேசுவுக்கு காட்டியது ராஜ்யங்களை மட்டுமல்ல “அவைகளின் மகிமையையும் காட்டினான்” என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது உலகம் தட்டையாக இருந்தால் கூட ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் காட்ட முடியாது. பிசாசு இயேசுவை மலையின் மேல் கொண்டு போய் ஏதோ அவனுக்கிருக்கும் கொஞ்ச சக்தியை பயன்படுத்தி ஏதோவொரு முறையில் அவைகளை இயேசுவுக்கு காட்டியிருக்க கூடும். அதை உங்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் நாம் ஒன்றும் செய்ய முடியாது.

இஸ்லாம் நண்பர்-
எனவே மாற்கு-16 அதிகாரம்-15- உம் மத்தேயு- 4 அதிகாரம்-8 - உம் சொவது இயேசு அகிலத்தார் அனைவருக்கும் வரவில்லை காணமல் போன இஸ்ரவேலர்களுக்கு மட்டும் தான் வந்தார் என்று.

என்னுடைய பதில் - 
இயேசு இஸ்ரவேல் வம்சத்துக்காக மட்டும் வந்தவர் என்பதை பைபிளை எப்படி புரட்டினாலும் உங்களால் நிரூபிக்க முடியாது. அதனால்தான் இப்படி அறிவீனமான நிறுவல்கள் உங்களுக்கு தேவைப்படுகிறது.

இஸ்லாம் நண்பர்-
எமது இந்த ஆதாரத்துக்கு கீழ் காணும் பைபளின் வாசனங்களும் வலு சேர்க்கின்றன...!!!! 
மத்தேயு-10 அதிகாரம்-5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,
6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
மத்தேயு-15 அதிகாரம்-24. அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.

என்னுடைய பதில் - 
இயேசு உலகில் வாழும் போது தமது சீடர்களை இஸ்ரவேல் மக்களிடம் மட்டுமே அனுப்பினார். மரித்து உயிர்த்தெழுந்த பின்னர் அவர்களை உலகமெங்கும் போகும் படி அனுப்பினார். காரணம் என்ன?

இயேசு உலகில் வாழும் போது தம்முடைய அற்புத அடையாளங்களை செய்து காட்டி தம்மை யூதர்களுக்கே மேசியாவாக அறிமுகம் செய்ய வேண்டியிருந்தது புறமக்களுக்கல்ல. எனவே தம்முடைய மேசியாத்தன்மையை அறிய வேண்டிய யூதர்களிடம் தம்முடைய சீடர்களை அனுப்பினார்.

யூத மக்களுக்கான மேசியாவாகவும் அத்துடன் அனைத்து உலக மக்களுக்கான பாவங்களை சுமப்பவராகவும்  இயேசு தன்னை காண்பிக்க வேண்டியிருந்தது. அதனால்தான் உலகில் வாழும் போது  யூதர்கள் மத்தியில் மட்டும் அனுப்பினார். உயிர்த்த பின்னர் தான் பாவங்களை சுமந்து தீர்த்து விட்ட நற் செய்தியை அறிவிக்கும் படி உலகெங்குமள்ள மக்களிடம் அனுப்பினார்

இயேசு உலகின் பாவங்களை சுமந்து தீர்ப்பவர் என்று யோவான் ஸ்நானகன் என்னும் தீர்க்கதரிசி கூறியதை நீங்கள் வேதத்தில் படித்ததில்லையா? 
யோவான் 1:29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

இஸ்லாம் நண்பர்-
மத்தேயு-15 அதிகாரம்-24. அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.

என்னுடைய பதில் - 
உண்மைதான் உலகிள்ள அனைத்து மக்களுக்காகவும் இஸ்ரவேல் மக்களிடம் அனுப்பப்பட்டார்.
அவர் வாழும் போது இஸ்ரவேலர் மத்தியில் பணி செய்து உலகிலுள்ள அனைத்து மக்களுக்காகவும் மரிக்க வேண்டியிருந்தது.

இஸ்லாம் நண்பர்-
எனவே தற்போது நாம் நம்புகின்றோம் எமது கிறிஸ்தவ தோழர்களுக்கு உண்மை எது என்பது தெளிவாகி இருக்கும் என்று. உங்கள் பிடிவாதம்களை கைவிட்டு விட்டு முழு உலகத்திற்கும் அனுப்ப பட்ட இறுதி நபியை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு மேலான சுவர்க்கத்தை தருவான்.

என்னுடைய பதில் - 
இயேசு யூத மக்களுக்காக அனுப்பப்பட்டவர் என்பதை  யாராவது நிரூபித்து விட்டு , “கிறிஸ்தவர்களே எல்லாரும் யூத மார்க்கத்துக்கு மாறுங்கள்” என்று கூறுவதில் அர்த்தம் உள்ளது. சம்பந்தமே இல்லாத இஸ்லாமுக்கு கூப்பிடுவது வேடிக்கையானது. அத்துடன் இயேசுவுக்கும் முகம்மது அவர்களுக்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது.

இஸ்லாமில் குறிப்பிடப்படுவது மேலான சுவர்க்கம் என்பதை நான் ஏற்றுக் கொள்ள தயாரில்லை.

இயேசு சகல மக்களுக்காகவும் அனுப்பப்பட்டார் என்பதற்கான வேறு வசன ஆதாரங்கள்

மத்தேயு 24:14 ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.

மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

மாற்கு 13:10 சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்.

சிமியோன் என்னும் தீர்க்கதரிசி ஆவியானவரின் ஏவுதலினாலே இயேசுவைப்பற்றி சொன்னது. -லூக்கா 2:29. ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; 30. புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், 31. தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின 32. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.

மாற்கு 16:15 பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

யோவான் 1:29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

யோவான் 3:17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

யோவான் 4:42 அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.

யோவான் 6:33 வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.

யோவான் 6:51 நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.

யோவான் 8:12 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.


யோவான் 12:47 ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.

By - Robert dinesh
Share this article :

1 கருத்துகள்:

Colvin சொன்னது…

பைபிள் வசனத்தை ஒழுங்காக கூட குறிப்பிட தெரியவில்லை. இதுதான் இஸ்லாமியர்களின் பைபிள் ஆராய்ச்சியின் இலட்ணம். பதில்கள் மிக அருமை.

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்